வாஷிங்டன்: அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 16 நாள்கள் நீடிக்கவுள்ள கொண்டாட்டங்களை அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடங்கிவைத்துள்ளார்.
பேரணி பாணி உரையுடன் திரு டிரம்ப் புதன்கிழமை (ஜூன் 24) கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்தார். அதனால், தேசிய அளவிலான நினைவு நாள் நிகழ்ச்சியை அரசியல்ரீதியான நிகழ்வாக அவர் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
வாஷிங்டன் தேசிய நினைவுச் சின்ன வளாகத்தில் (National Mall) நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தமது அரசியல் நோக்கத்துக்கான ஒரு நிகழ்வாக அவர் மாற்றியதால் அதிகாரபூர்வக் கொண்டாட்டத்துக்கும் பிரசார பாணியிலான நிகழ்வுக்கும் வேறுபாடு இல்லாமல் போனதாகக் கூறப்படுகிறது.
“நமது 250வது சுதந்திர தினத்தையொட்டடி இங்கு நாம் திரண்டிருக்கும் வேளையில் அமெரிக்கா மீண்டும் அதிரடியாகக் களமிறங்கிவிட்டது என்பதை எடுத்துரைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்,” என்று சூளுரைத்தார் திரு டிரம்ப்.
“உங்களுக்குத் தெரிந்திருக்கும், சிறிது காலத்துக்கு முன்பு நாம் உயிரில்லாத நாடாக இருந்தோம். இப்போது உலகில் ஆகச் சிறப்பான நாடாக விளங்குகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்காவின் புதிய பொற்காலத்தை வரவழைக்கப்போவதாக அவர் உறுதியளித்தார். பல ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்துவந்த நாட்டை மீட்டு வலிமைபெறச் செய்த தலைவராக திரு டிரம்ப் தம்மை வருணித்துக்கொள்ளவும் செய்தார்.

