பேங்காக்: தாய்லாந்தின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் பூம்ஜைதாய் கட்சியின் திரு அனுடின் சார்ன்விராகுல். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமை (மார்ச் 19) திரு அனுடின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இருபது ஆண்டுகள் தாய்லாந்தின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்படும் முதல் நபர் திரு அனுட்டின்.
தாய்லாந்து அரசியலில் தடம் பதிக்க நீண்டகாலமாகப் போராடி வந்த பூம்ஜைதாய் கட்சி, தேர்தலில் அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அதன் ஆகப் பெரிய வைரியான நத்தாபோங் ரியுங்பன்யவுட் கட்சியைப் பின்னுக்குத் தள்ளியது.
அண்டை நாடான கம்போடியாவுடன் கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவ மோதல்களை அடுத்து திரு அனுட்டினின் கட்சி தேசியவாதத்தை மக்களிடம் அதிகம் முன்னிறுத்தியது.
தாய்லாந்தில் இதற்குமுன் ஆதிக்கம் செலுத்திய பியூ தாய் கட்சியின் வீழ்ச்சி திரு அனுட்டினின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
ஓராண்டுக்குள் இரண்டாம் பிரதமரைத் தாய்லாந்து நீதிமன்றம் பதவியிலிருந்து நீக்கியதை அடுத்து அரசாங்கக் கூட்டணியை கைவிட்ட திரு அனுட்டின் துரிதமாகப் புதிய கட்சியைத் தொடங்கினார்.
அரசியல் ரீதியாகப் பலத்த அடிவாங்கிய பியூ தாய் கட்சியுடன் பூம்ஜைதாய் கட்சி கூட்டணி அமைத்தது. மற்ற சிறு சிறு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வாக்களித்தன.
அதில் திரு அனுட்டின் 251 வாக்குகளை வென்று மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது கூட்டணி நாடாளுமன்றத்தில் உள்ள 499 இடங்களில் 292 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்களிப்புக்குமுன் 59 வயது திரு அனுட்டின், அமைச்சரவையை உடனடியாக அமைத்து தாய்லாந்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவிருப்பதாகக் கூறினார்.
“உங்கள் குரல்களுக்கும் செவிசாய்க்கப்படும்,” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திரு அனுட்டின் கூறினார்.
அரசாங்கத் தலைவராகத் தமது கடமையைச் சரியாகச் செய்ய யோசனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் திரு அனுட்டின் தெரிவித்தார்.
அனைவரின் குறிக்கோள் மக்களின் நலனைப் பராமரிப்பதுதான் என்றார் அவர்.

