துபாய்/வாஷிங்டன்: அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான பதற்றங்களுக்கு இடையே, ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் ஒன்று தாக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவம் மீண்டும் ஈரானைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
நான்கு மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர, இரண்டு வாரங்களுக்கு முன்பு எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதாகப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்கா இனி நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாத ஒரு நிலை வரலாம் என்றும், அப்போது நாங்கள் மிகவும் வெற்றிகரமாகத் தொடங்கிய வேலையை ராணுவ ரீதியாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (ஜூன் 27) சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
அவ்வாறு நடந்தால், “இஸ்லாமியக் குடியரசான ஈரான் இனி இருக்காது” என்று அவர் எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை பனாமாக் கொடியுடன் சென்ற கப்பல் ஒன்று ஈரானிய ஆளில்லா வானூர்தி மூலம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்கள் படைகள் புதிய தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
தெற்கு ஈரானில் உள்ள சிரிக் (Sirik) பகுதியில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக, அந்நாட்டு நேரப்படி ஜூன் 28 அதிகாலை அரசின் ஒளிபரப்பு நிறுவனமான ஈரானிய ஊடகம் கூறியது. எனினும், கூடுதல் விவரங்களை அது வழங்கவில்லை.

