சிட்னி: ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் சனிக்கிழமை (செப்.16) வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை ஆக அதிக வெப்பநிலை நிலவும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகரான சிட்னியின் கிங்ஸ்ஃபோர்ட் ஸ்மித் விமான நிலையத்தில் 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையைவிட இது 12 டிகிரி செல்சியஸ் அதிகம்.
‘எல் நினோ’ பருவநிலை நிகழ்ச்சி வலுவடைவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக வானிலை ஆய்வகம் இந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வெப்பநிலை சராசரிக்குமேல் 8 முதல் 16 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
‘எல் நினோ’ பருவநிலை நிகழ்ச்சியின் விளைவாக காட்டுத் தீச் சம்பவங்கள், புயல்கள், நீடித்த வறட்சி போன்றவை ஏற்படக்கூடும்.