பண்டா அச்சே: இந்தோனீசியாவின் அச்சே வட்டாரத்திலுள்ள கிழக்குக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மோசமான வானிலை காரணமாக காணாமல்போன படகில் பயணம்செய்த நான்கு ஆஸ்திரேலிய அலைச்சறுக்குபவர்கள்(சர்ஃபர்கள்) உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் படகில் ஏழு பேர் பயணம் செய்தனர். அவர்கள் நியாஸ் தீவிலிருந்து அச்சே வட்டாரத்திலுள்ள பன்யாக் தீவுகளுக்குப் பயணம் செய்தனர் எனச் சொல்லப்பட்டது.
அவர்கள் பயணம் செய்த படகு மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் காணாமல்போனது என இந்தோனீசியாவின் தேசிய மீட்பு அமைப்புக் கூறியது.
அந்த நான்கு ஆஸ்திரேலிய அலைசறுக்குபவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகக் காணாமல் போனவர்களில் ஒருவரான திரு எலியட் ஃபுட்டின் தந்தை தெரிவித்ததாக நைன் நியூஸ் தெரிவித்தது.
அதில் பயணம் செய்த இந்தோனீசியாவைச் சேர்ந்த பணியாளர்களில் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், ஒருவரை இன்னும் தேடிக்கொண்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

