பேங்காக்: தாய்லாந்தின் வானிலைத் துறையும், சுற்றுப்புறத் துறையும் தலைநகர் பேங்காக்கின் வெப்பக் குறியீடு அபாய நிலையை எட்டியதாக வியாழக்கிழமை (ஜூன் 25) அறிவித்துள்ளன.
அங்கு வெப்பநிலை 51.9 டிகிரி செல்சியஸ் என்று அதிகாரிகளால் கணிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பேங்காக் வாசிகள், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வெப்ப அலையின் தாக்கத்தால் ஏற்படும் நோய்கள் குறித்தும் பொதுமக்களிடம் கவனமாக இருந்துகொள்ளும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெப்பத்தால் பாதிப்படையக்கூடிய எட்டு வகைப் பிரிவினரை அடையாளம் கண்டு உடனடியாக கண்காணிக்க சிறப்புப் பராமரிப்பு அறைகளை அரசாங்கம் பேங்காக் நகரில் திறந்துள்ளது. வெப்பக் குறியீடு என்பது வெளிப்புறத்தில் உள்ள பொதுவான வெப்பநிலை குறித்த அளவு அல்ல என்ற அதிகாரிகள் மாறாக மனித உடலில் உணரக்கூடிய வெப்பம் சார்ந்தது என விளக்கினர்.
காற்றின் வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் இணைத்து வெப்பக் குறியீடு கணிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் விவரித்தனர்.
அதிக அளவில் வெப்பம் இருந்தால், உடலில் வியர்வை வருவது தடைப்பட்டு, நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

