பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள மதுக்கூடம் ஒன்றில் ஜூலை 12ஆம் தேதி தீச்சம்பவம் ஏற்பட்டது. இதில் 33 பேர் உயிரிழந்தனர்.
ரோங் பீர் நா லாட் பராவ் மதுக்கூடத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டது. அது வேகமாக அருகிலிருந்த இசைக்கூடத்திற்கும் பரவியது. இதனால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தீச்சம்பவத்தால் பலத்த காயமடைந்த 20 வயதுப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் ஜூலை 19ஆம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக பேங்காக் மதுக்கூட தீச்சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்தது. கிட்டத்தட்ட 70 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மாண்டவர்களில் பலர் புகையைச் சுவாசித்து இறந்தனர் என்று காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றவர்கள் தீக் காயங்கள் காரணமாக உயிரிழந்தனர். தீச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதுக்கூடத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

