பேங்காக்: பேங்காக் பெருநகர நிர்வாகம் (பிஎம்ஏ) அந்நகரின் வெப்ப அளவு அபாய நிலையை எட்டிவிட்டதாக திங்கட்கிழமை (ஏப்ரல் 6) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால் அங்குள்ள மக்களுக்கு சுகாதாரம் குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.
பிஎம்ஏயின் பதிவுப்படி, அன்றைய நாளின் வெப்ப அளவு 43 டிகிரி செல்சியசுக்கும் 51.9 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருந்தது. அது ‘மிகவும் அபாயகரமானது’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 52 டிகிரி செல்சியஸ் அளவை எட்டும் சாத்தியம் உள்ளது என்று அமைப்பு தெரிவித்துள்ளது.
உண்மை வெப்பநிலை 38 டிகிரி செல்சியசுக்கும் 40 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருந்தாலும் அதிகமான ஈரப்பதம், வெப்பக் களைப்பு, வெப்பத்தாக்கம் போன்ற சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தாய்லாந்து அதிகாரிகள் விளக்கினர்.
மயக்கம், சோர்வு, தலைவலி, அதிக வியர்வை, வேகமான இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகளை மக்கள் கண்காணித்துக்கொள்ளும்படி பிஎம்ஏ அமைப்பு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
இப்படி ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிழலுக்கு அடியிலோ அல்லது குளிர்சாதன வசதியுள்ள இடங்களுக்குள் விரைந்து சென்றோ ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்படுகிறது.
நாள்முழுவதும் நிறைய தண்ணீர் குடித்து வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, நேரடியாக சூரியக் கதிரில் படாமல் இருந்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு தெரிவித்தது பிஎம்ஏ அமைப்பு.

