முவார்: மலேசியாவில் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான நேஷனலில் தாங்கள் தொடரப்போவதாக பெர்சத்து கட்சி அறிவித்துள்ளது.
கட்சித் தலைவர் முகைதீன் யாசின் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக பாஸ் கட்சியில் பதற்றம் காணப்பட்ட நிலையில் பெர்சத்து இவ்வாறு அறிவித்துள்ளது.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து விலகும் எண்ணம் தங்களுக்கு இருந்ததில்லை என்றும் பெர்சத்து தொடர்ந்து பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு அதன் பங்கை ஆற்றும் என்றும் திரு முகைதீன் கூறினார். பாஸ் கட்சி பெர்சத்துவுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து இதுகுறித்து வதந்திகள் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
“நாங்கள் பெரிக்கத்தானில் தொடர்வோம். இந்தக் கூட்டணி உருவாக நாங்கள் காரணமாக இருந்திருக்கிறோம். தொடக்கத்திலேயே அதன் வளர்ச்சியில் நாங்கள் அங்கம் வகித்துவந்திருக்கிறோம்,” என்று முன்னாள் மலேசியப் பிரதமரான திரு முகைதீன் தமது கட்சி உறுப்பினர்களிடம் சொன்னார். ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தமது கட்சி செயல்பாடுகளை வெளியிடும் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இரவு அவர் பேசினார்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து எந்தத் தரப்பு விலகுவதாக இருந்தாலும் அதுகுறித்து ஒரு தரப்பு மட்டும் முடிவெடுக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

