வாஷிங்டன்: நடந்து முடிந்த இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அதிபர் ஜோ பைடன் முன்னதாகவே விலகியிருக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு பைடன் அவ்வாறு செய்திருந்தால், அவருக்குப் பதிலாக வேறு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை ஜனநாயகக் கட்சி மேலும் சிறப்பான முறையில் மேற்கொண்டிருக்கும் என்று திருவாட்டி பெலோசி சொன்னார்.
“அதிபர் முன்னதாகவே விலகிக்கொண்டிருந்தால் மற்ற தகுதியான வேட்பாளர்களும் முன்வந்திருக்கக்கூடும்,” என்று வியாழக்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற நேர்காணலில் திருவாட்டி பெலோசி குறிப்பிட்டார். அந்த நேர்காணல் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தில் வெளியானது.
திரு பைடன் முன்னரே விலகியிருந்தால் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிறப்பாகச் செய்திருப்பார் என்று திருவாட்டி பெலோசி கருத்துரைத்தார். திரு பைடன், அதிபர் தேர்தல் வேட்பாளராக திருவாட்டி ஹாரிசை உடனடியாக அங்கீகரித்ததாகவும் அதன் காரணமாக வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தார் என்றும் முன்னோடித் தேர்தல் மூலமாக வேட்பாளர் தேர்வை சரிவர மேற்கொள்ள முடியாமல் போனது என்றும் அவர் குறை கூறினார்.
இம்மாதம் ஐந்தாம் தேதியன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான திரு டோனல்ட் டிரம்ப் மகத்தான வெற்றிபெற்றார்.