வாஷிங்டன்: நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டோனல்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் நவம்பர் 13ஆம் தேதி ஜோ பைடன் சந்திக்கிறார்.
டோனல்ட் டிரம்ப்பிடம் ஆட்சி, அதிகாரம் சுமூகமாக ஒப்படைக்கப்படும் என்று முன்னதாக அதிபர் ஜோ பைடன் உறுதியளித்திருந்தார்.
இதன் முதல் கட்டமாக இந்தச் சந்திப்பு அமைகிறது.
2020ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் தாம் தோல்வி அடைந்ததாக டிரம்ப் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று மீண்டும் அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கிறார்.
ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியினர் டிரம்ப்பை ‘ஓவல்’ அலுவலகத்தில் காலை 11 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் நவம்பர் 14 நள்ளிரவு) சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை நவம்பர் 9 ஆம் தேதி தெரிவித்தது.
2025 ஜனவரியில் திரு டிரம்ப் அதிபர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
78 வயதான முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரமான டிரம்ப், ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டும் சில குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தபோதும் முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மையைப் பெற்று வாகை சூடியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து டிரம்ப்பை தொலைபேசியில் அழைத்துப் பேசி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த பைடன், நவம்பர் 13ஆம் தேதி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு திரு பைடனின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளியல் மந்தநிலை, பணவீக்கம் ஆகியவை வாக்காளர்களை கவலையில் ஆழ்த்தியதாக கருத்துக் கணிப்புகள் முன்னுரைத்திருந்தன.
81 வயதில் திரு பைடனின் செயல்திறன் குறித்து கேள்வி எழுந்ததால் ஜூலை மாதம் அதிபர் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கினார்.
‘டிரம்ப் 2.0’ என்று அழைக்கப்படும் டோனல்ட் டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்திற்கு முக்கிய பதவியான வெள்ளை மாளிகை நிர்வாகியாக சுசீ வில்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், டிரம்ப் பிரசாரக் குழுவில் முக்கிய பங்காற்றியவர்.
இந்த நியமனத்தையடுத்து உயர் பதவியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.