வாஷிங்டன்: பிறப்புரிமைக் குடியுரிமை தொடர்பான வழக்கின் வாய்மொழி வாதங்களில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமையன்று (ஏப்ரல் 1) நேரில் உச்ச நீதிமன்றம் செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்த டிரம்ப் பிறப்பித்த உத்தரவின் சட்டபூர்வத் தன்மை குறித்த வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1ஆம் தேதியன்று விசாரிக்கிறது.
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அவரது முயற்சிகளின் சர்ச்சைக்குரிய பகுதியாக இது கருதப்படுகிறது. மேலும், 19ஆம் நூற்றாண்டு அரசியலமைப்பு விதி நீண்டகாலமாகப் புரிந்து கொள்ளப்பட்ட விதத்தையே மாற்றியமைக்கும் ஒரு நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.
குடியேற்றத்தின் மீதான கடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டு ஜனவரியில் தாம் மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே அதிபர் டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்தப்போவதாக அவர் பல ஆண்டுகளாக விடுத்த எச்சரிக்கையை இந்த உத்தரவு செயல்படுத்தியது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றிக் குறிப்பிட்ட டிரம்ப், “அவர்களில் சிலரை எனக்குப் பிடிக்கும், சிலரைப் பிடிக்காது,” என்றார். அதே வேளையில், முன்னாள் ஜனநாயகக் கட்சி அதிபர்களான ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து அவர் விமர்சனங்களையும் முன்வைத்தார்.
பெற்றோர்களில் ஒருவர்கூட அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாகவோ அல்லது நிரந்தரவாசியாகவோ இல்லாத பட்சத்தில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கக்கூடாது என அரசு அமைப்புகளுக்கு டிரம்ப் பிறப்பித்த அந்த உத்தரவை கீழ் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது.

