சோல்: தென்கொரியாவில் டிசம்பர் 29ஆம் தேதி விபத்துக்குள்ளான ஜேஜு ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி, விமானம் கான்கிரீட் சுவர்மீது மோதுவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பு தகவல்களைப் பதிவு செய்வதை நிறுத்திவிட்டதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு சனிக்கிழமையன்று (ஜனவரி 11) தெரிவித்தது.
179 பேரின் உயிரைப் பலிவாங்கிய இவ்விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கறுப்புப் பெட்டி பதிவு செய்வதை நிறுத்தியதற்கான காரணம் குறித்து ஆராயப்படும் எனவும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
மேலும், தென்கொரியாவில் நடந்த மிகவும் மோசமான சம்பவம் இது என்று அமைச்சு அதில் குறிப்பிட்டது.
“ஜேஜு ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியை முதலில் தென்கொரிய அதிகாரிகள் ஆராய்ந்தனர். தரவுகள் காணாமல் போனது கண்டறியப்பட்டதை அடுத்து, விரிவான சோதனையை மேற்கொள்ள அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆய்வகத்திற்குக் கறுப்புப் பெட்டி அனுப்பப்பட்டது,” எனத் தென்கொரிய அமைச்சு சொன்னது.
இந்த விபத்தில் விமானத்தின் வால் பகுதியில் அமர்ந்திருந்த இரு விமானப் பணியாளர்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.