சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்க, சீன அதிபர்களின் நேரடிச் சந்திப்புக்குப் பிறகு அளித்த செய்தியாளர் பேட்டியில் ஸி ஒரு சர்வாதிகாரி என்று கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்து நேர்மையானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தனக்குப் பிடிக்காதவை என்று கூறப்படுவதை சீனா எதிநோக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். தன்னடக்கமும் சுயகட்டுப்பாடும் நிறைந்தவர் என்று அறியப்படும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், புதன்கிழமை (நவம்பர் 15) செய்தியாளர்களிடையே அதிபர் பைடன் அந்த கருத்தை முன்வைத்தபோது சற்று முகம் சுளித்ததைக் காணமுடிந்தது.
திரு பைடனுக்கு பல நாள்களாக ஆலோசகராக இருந்துள்ள திரு பிளிங்கன், அதிபர் எப்போதும் நேர்மையாக தமது கருத்தை முன்வைப்பவர் என்று ஒரு நேர்காணலில் கூறினார்.
அமெரிக்காவுக்குப் பிடிக்காதவற்றை எப்படி சீனா செய்தும் கூறியும் வருகிறதோ, அதைப்போலவே நாங்களும் நடந்துகொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இரு பெரிய பொருளியல் நாடுகளுக்கு இடையே பதற்றத்தைத் தணித்து நல்லுறவைத் தொடர, கடந்த ஜூன் மாதத்தில் திரு பிளிங்கன் சீனாவுக்கு பயணம் செய்திருந்தார்.
ஜனநாயகத்துக்கு மாறான கம்யூனிச சித்தாந்தத்தால் சீனா ஆளப்படுவதால் அக்கருத்தை தாம் கூறியதாக அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு, இது பொறுப்பற்ற தவறான கருத்து என்றும் சீனா அதனை எதிர்க்கிறது என்றும் சீன வெளியுறவுத் துறையின் பேச்சாளர் மவு நிங் கூறினார்.

