சான் ஃபிரான்சிஸ்கோவில் படகு மூழ்கியது; ஒருவர் மரணம், இருவரைக் காணவில்லை

சான் ஃபிரான்சிஸ்கோவில் படகு மூழ்கியது; ஒருவர் மரணம், இருவரைக் காணவில்லை

1 mins read
dbd59b2e-0501-4439-9d89-a1332c504bca
13 பேர் கரை திரும்பிய நிலையில், மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். - படம்: நியூயார்க் டைம்ஸ்

சான் ஃபிரான்சிஸ்கோ: மூன்றடுக்கு மிதவைப் படகு ஒன்று சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடா அல்கட்ராஸ் தீவு அருகே மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார்; இருவரைக் காணவில்லை.

19 பேருடன் சென்றுகொண்டிருந்த அந்தப் படகு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியதாக அதிகாரிகள் கூறினர்.

காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மொத்தம் 11 மீட்புப் படகுகள் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக சான் ஃபிரான்சிஸ்கோ தீயணைப்புத் துறைத் தலைவர் டீன் கிறிஸ்பென் கூறினார்.

விபத்து நேர்ந்த பகுதிக்கு அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், படகு மூழ்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றார். படகில் தீப்பற்றி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டாலும் அப்படி எதுவும் நிகழவில்லை என்று திரு கிறிஸ்பென் தெரிவித்தார்.

“படகில் பயணம் செய்தவர்களில் 13 பேர் பாதுகாப்பாகக் கடற்கரைக்குத் திரும்பிய நிலையில், மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஒருவர் இறந்துவிட்டார். இருவரின் நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை,” என்றார் அவர்.

படகு கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மூழ்குவதைக் காட்டும் படங்களை உள்ளூர் தொலைக்காட்சிச் செய்தியில் காணமுடிந்ததாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.

இதற்கிடையே, தேடி மீட்கும் பணியில் இதர அமைப்புகளுடன் தானும் இணைந்துள்ளதாக அமெரிக்கக் கடலோரக் காவற்படை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்