பேங்காக்: பெற்றோரின் அனுமதியின்றி, ஓர் ‘பிக்அப்’ வகை வாகனத்தை ஓட்டிய 11 வயதுச் சிறுவன், ஊர்வலமாகப் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த துறவிகளை மோதினான்.
வியாழக்கிழமை (ஜூலை 2) தாய்லாந்தின் வடகிழக்கில் உள்ள முக்தஹான் மாநிலத்தில் நடந்த விபத்தில், எட்டுத் துறவிகள் மரணமடைந்ததோடு, 10 பேர் காயமுற்றனர்.
ஊர்வலத்தில் 35 துறவிகளும் ஐந்து சீடர்களும் இருந்தனர் என்றும் வாகனத்தை ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுவது ஒரு சிறுவன் எனவும் உள்ளூர் காவல்துறை தலைவர் பய்ரோஜ் தாய்புட்சா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறுவனின் வீட்டில் இருந்து அந்த வண்டி குடும்பத்தின் அனுமதியின்றி எடுக்கப்பட்டது என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தமது பேரன் காலையில் யாருக்கும் தெரியாமல் வாகனத்தை எடுத்துச் சென்றதாக அவனின் பாட்டி அதிகாரிகளிடம் கூறினார். அவன் எங்கு செல்கிறான் என்பதை அவர் அறியாமல், காவல்துறையைத் தொடர்புகொண்டு, உடனடியாக வாகனத்தைத் தடுக்கும்படி உதவி கேட்டுள்ளார்.
‘நா கம் நொய்’ சோதனைச் சாவடியை அவன் கடந்துவிட்டதையும், முக்தஹான் நகரில் துறவிகளை அவன் மோதியதையும் பாட்டி பிறகுதான் அறிந்துகொண்டார்.
உள்ளூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

