தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனுக்கு $385 மில்லியன் மதிப்பிலான ராணுவக் கருவிகளை வழங்கும் பிரிட்டன்

1 mins read
d3c33b6f-c09d-42c1-81ae-b47ca10cc914
பிரிட்டனில் உக்ரேனியப் படைவீரர்களுக்கான ‘ஆப்பரேஷன் இன்டெர்ஃபிளெக்ஸ்’ பயிற்சித் திட்டத்தை மேம்படுத்தவும் பிரிட்டன் திட்டமிடுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டன் உக்ரேனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான 225 மில்லியன் பவுண்ட் (S$385 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை, டிசம்பர் 19ஆம் தேதி அறிவித்துள்ளது.

ஆளில்லா வானூர்திகள், படகுகள், ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்புகள் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

பிரிட்டனின் தற்காப்பு அமைச்சர் ஜான் ஹீலே டிசம்பர் 18ஆம் தேதி கியவ்வில் உக்ரேனியத் தற்காப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துப் பேசிய பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சந்திப்பில் 2025ல் உக்ரேனுக்கான பிரிட்டனின் ஆதரவை அதிகரிக்க அமைச்சர் ஹீலே உறுதியளித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரேன் மீதான படையெடுப்பை மேற்கொண்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரது எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிய உக்ரேனிய மக்களின் துணிச்சலைத் திரு ஹீலே பாராட்டினார்.

இருப்பினும் அவர்கள் இதில் தனித்து ஈடுபட இயலாது என்பதால் பிரிட்டன் உக்ரேனுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். புட்டின் இந்தப் போரில் வெற்றிபெறாமல் தடுப்பதை உறுதிசெய்ய, உக்ரேனுக்கு பிரிட்டன் தோள்கொடுக்கும் என்றார் அவர்.

உக்ரேனிய அமைச்சர் உமெரோவ், பிரிட்டனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். தங்கள் தற்காப்பு முயற்சிக்கு, நிலையான ஆயுத விநியோகம் தொடர்ந்து கிடைப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.

ரஷ்யா வடகொரியர்களைப் போர்க்களத்தில் ஈடுபடுத்தியதை அடுத்து மேலை நாடுகள் உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க முனைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்