லண்டன்: பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, கிழக்கு இங்கிலாந்தில் உள்ள வின்சோர் அரண்மனையில் இருந்து வெளியேறிவிட்டதாக பிபிசி ஊடகம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க நீதித் துறை ஜனவரி மாதத்தில் வெளியிட்ட பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் 65 வயதான ஆண்ட்ரூவின் பெயரும் இடம்பெற்றது அவரை இந்நிலைக்குத் தள்ளியுள்ளது.
திரு ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்சோர் என்ற முழுப்பெயருடன் அவரது பெயர் அப்பட்டியலில் இடம்பெற்றது குறித்து அவர் விளக்கம் அளிக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டாமர் உட்பட பலரும் அவருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்கச் சிறையில் தண்டனைக் காலத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டெயினுடன் ஆண்ட்ரூவுக்குத் தொடர்பு இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிப்ரவரி 2ஆம் தேதி அவர் வின்சோர் அரண்மனையைக் காலி செய்துவிட்டு நார்ஃபொக்கில் உள்ள சன்ரிங்ஹம் பண்ணையில் தற்காலிகமாகத் தங்கியிருப்பதாக பிபிசி தெரிவித்தது. அதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிசெய்ய மறுத்துவிட்டது.
ஆண்ட்ரூ, அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்கஸன் உடன் வின்சோர் மாளிகையில் 20 ஆண்டுகளாக வாழ்ந்துவந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு, அவர் அதிகாரபூர்வ பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

