லண்டன்: பிரிட்டனில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்சியாக, பேருந்துக் கட்டணத்தைக் குறைக்கப் போவதாக அந்நாட்டின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உறுதி அளித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒற்றைப் பேருந்துக் கட்டணத்தின் உச்சவரம்பு 2 பவுண்டாக ($3.50) நிர்ணயிக்கப்படும். இதன் மூலம் பயணக் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு வரை குறையும்.
இந்த நடவடிக்கைக்காக, 454 மில்லியன் பவுண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தின் மீதான மதிப்புக்கூட்டு வரியை அக்டோபர் 1 முதல் நீக்கவுள்ளதாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது.
பிரிட்டிஷ் குடும்பங்கள் ஆண்டிற்குச் சராசரியாகச் செலுத்தும் 1,862 பவுண்டு மின்சாரக் கட்டணத்தில் இந்த வரிவிலக்கு கணிசமான நிவாரணத்தை அளிக்கும். இதனால், சராசரி மின்சாரக் கட்டணத்தில் ஆண்டிற்கு 45 பவுண்டு வரை மிச்சமாகும்.
“அனைவருக்கும் ஏற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே தமது இலக்கு,” என்று பிரதமர் பர்ன்ஹாம் கூறியுள்ளார்.
சமூகங்களைப் பிணைப்பது, சிறந்த வாய்ப்புகளை வழங்குவது மற்றும் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மக்களின் நிதி நெருக்கடியைப் போக்கும் வகையில், புதிய அரசாங்கம் விரைவான பலன்களைத் தரும் திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் திரு பர்ன்ஹாம் தெரிவித்தார்.

