சிட்னி: பிரிட்டிஷ் அரசுக் குடும்பத்தின் ஆட்சியிலிருந்து ஆஸ்திரேலியா விலகிக்கொள்வது எப்போதையும்விட முக்கியத்துவம் வாய்ந்தது என்று முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.
அதற்குப் பதிலாக நாட்டின் தலைமைத்துவத்தை, அதன் நாடாளுமன்றம் வாக்கெடுப்பு நடத்தித் தேர்ந்தெடுப்பதை மக்கள் விரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) கூறினார்.
திரு டர்ன்புல் 2015லிருந்து 2018ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியப் பிரதமராகப் பொறுப்பு வகித்தார். பிட்டிஷ் அரசுக் குடும்பத்துக்குப் பதிலாக ஆஸ்திரேலியர்களே தலைமைத்துவப் பொறுப்பில் இருப்பதற்குக் குரல் கொடுக்கும் வகையில் 1999ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடந்தது. தோல்வியடைந்த அந்த இயக்கத்தை திரு டர்ன்புல் வழிநடத்தினார்.
முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-விண்ட்சோர் அண்மையில் கைது செய்யப்பட்டார். நவீன காலத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
1999 வாக்கெடுப்பு நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தாங்களே வாக்கெடுப்பு நடத்தி நாட்டின் தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவின் அரசியல் சூழலைச் சரிசெய்யலாம் என்று திரு டர்ன்புல் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியா, 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்தது. பிறகு 1901ஆம் ஆண்டு, நடைமுறை சுதந்திரம் (de facto independence) பெற்றது. ஆனால், ஆஸ்திரேலியா முழு குடியரசாக இன்னமும் உருவெடுக்கவில்லை.

