கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு எதிராக எழுந்துள்ள முறைகேடு குறித்த புகார்களை விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என ஆளும் கூட்டணியின் முக்கிய அங்கமான ஜனநாயகச் செயல் கட்சி புதன்கிழமையன்று (பிப்ரவரி 25) கோரிக்கை விடுத்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் அதன் தலைவர் மீது கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு அதிருப்திக் குரல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அரசுப் பணி விதிகளை மீறியது மற்றும் அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சில வணிகக் குழுக்கள், நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கு ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் உதவி செய்வதாகப் புளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. உள்நாட்டு ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தச் செய்தி வெளியிடப்பட்டது.
இருப்பினும், இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மையல்ல என்று செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 2) வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆணையம் மறுத்துள்ளது. நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொண்டு வரும் புலனாய்வு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் முயற்சியே இது என்றும் ஆணையம் கூறியுள்ளது.

