ஒட்டாவா: காஸாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மனிதாபிமான நிலை குறித்து கனடா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் உயிருக்கு ஆபத்தான நிலை குறித்து கனடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி எச்சரித்துள்ளார்.
வட காஸா பகுதியில், பஞ்சம் நிலவுகிறது அல்லது ஏற்படக்கூடிய வலுவான சாத்தியம் இருப்பதாகக் கூறி, பஞ்சம் தொடர்பான மறுஆய்வுக் குழு நவம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையை அவர் சுட்டினார்.
முன்னதாக, காஸாவில் 133,000 பேர் பேரிழவை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியதாக அக்குழு கூறியது.
“காஸாவுக்குள் குறைவான மனிதாபிமான உதவி மட்டுமே அனுமதிக்கப்படுவதால், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் உயிரிழக்கின்றனர்,” என்று அனைத்துலக மேம்பாட்டு அமைச்சர் அஹ்மெண்ட் ஹுசைனுடன் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் திருவாட்டி ஜோலி கூறினார்.
போதிய அளவிலான உதவி அதனை நம்பியிருப்போரைச் சென்றடைவதில்லை என்றும் மனிதாபிமான அமைப்பினரும் ஊழியர்களும் தொடர்ந்து தடைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின் விதிகளுக்கு இஸ்ரேல் கட்டுப்பட்டு நடந்து, பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவியை கணிசமான அளவு அதிகரிக்க வேண்டும் என்றும் அது கூறியது.
சென்ற ஆண்டு அக்டோபரில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 250க்கும் மேற்பட்டோர் பிணைபிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டில் காஸாவில் 43,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.