ஒட்டாவா: பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்ல்ஸுக்கு கனடாவில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
76 வயதாகும் மன்னர் சார்ல்ஸ் அரசியார் கமிலாவுடன் ஒரு நாள் பயணமாக கனடா சென்றார். அரசராக முடிசூடிய பின்னர் அவர் கனடாவுக்குச் சென்றிருப்பது இதுவே முதல் முறை.
கனடா தலைநகரில் வந்திறங்கிய அரச தம்பதியினரை விமான நிலையத்தில் பிரதமர் மார்க் கார்னி வரவேற்றார்.
பின்னர், விவசாயிகள் சந்தைக்கு அவர்கள் சென்றனர். அங்கு செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான கனடிய மக்கள் திரண்டிருந்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மே 27) உரையாற்ற பிரதமர் மார்க் கார்னி மன்னருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரச தம்பதிக்கு அளிக்கப்பட்டுள்ள வரலாற்றுபூர்வ வரவேற்பு காலத்திற்கு ஏற்ற ஒன்று என்று திரு மார்க் தெரிவித்துள்ளார்.
கடனாவை அமெரிக்காவுடன் இணைத்துவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் வேளையில் மன்னர் சார்ல்ஸின் கனடியப் பயணம் அமைந்துள்ளது.
கனடாவின் வர்த்தகம் குறித்தும் அதன் அரசுரிமை குறித்தும் மன்னர் சார்ல்ஸ் கருத்து எதுவும் கூறுவாரா என்று ஊடகங்களும் அரசியல் கவனிப்பாளர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பிரிட்டிஷ் பேரரசின் பிரதிநிதியாக கனடாவில் தலைமை ஆளுநர் என்ற பொறுப்பை மன்னர் வகிப்பார். கனடாவில் அந்தத் தலைமை ஆளுநர் அரியணை உரை நிகழ்த்துவது வழக்கம்.
மன்னரின் மறைந்த தாயாரும் முன்னாள் பிரிட்டிஷ் அரசியாருமான இரண்டாம் எலிசபெத் தமது நீண்ட ஆட்சிக் காலத்தின்போது 1957, 1977 ஆகிய ஆண்டுகளில் கனடாவில் அரியணை உரை நிகழ்த்தினார்.