சோல்: தென்கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வாராந்தர விமானச் சேவை உரிமைகளை அதிகரிக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த உரிமைகள் அதிகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தென்கொரியப் போக்குவரத்து அமைச்சு வியாழக்கிழமை (ஜூன் 4) இதனைத் தெரிவித்தது.
கடந்த மே 27, 28ஆம் தேதிகளில் சோலில் நடைபெற்ற இருதரப்பு விமானப் போக்குவரத்துப் பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இதன்கீழ், வாராந்தரப் பயணிகள் விமானச் சேவை உரிமைகள் 608லிருந்து 664 ஆக உயர்த்தப்படும். மேலும், சரக்கு விமானச் சேவை உரிமைகள் வாரத்திற்கு 54லிருந்து 68 ஆக உயர்த்தப்படும் என்று நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து அமைச்சு கூறியது.
இதன் மூலம் இஞ்சியோன் - ஷாங்காய் போன்ற அதிகத் தேவையுள்ள வழித்தடங்களிலும், பூசான் போன்ற வட்டார விமான நிலையங்களிலிருந்தும் சீன நகரங்களுக்கான சேவைகள் விரிவடையும்.
முதல் காலாண்டில் இரு நாட்டுப் பயணிகள் போக்குவரத்து 4.39 மில்லியனை எட்டி, கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முந்தைய எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
போக்குவரத்து அதிகரிக்கும் வேளையில் இந்த விரிவாக்கம் எட்டப்பட்டது ஊக்கமளிப்பதாக அமைச்சின் கொள்கைப் பிரிவுத் தலைவர் லீ சோ-யங் கூறினார். சீனப் பயணிகளின் வருகை, வர்த்தக வசதி, கொரிய விமான நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றின்வழி நாட்டின் பொருளியல் புத்துயிர் பெற இது உதவும் என அவர் குறிப்பிட்டார்.
புதிய உரிமைகளை 2026ஆம் ஆண்டின் பிற்பாதியில் தென்கொரிய விமான நிறுவனங்களுக்கு ஒதுக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

