சீனாவில் சமூக ஊடகங்களில் பிரபலமான ஆடவர் ஒருவர், இணையத்தில் நேரலையாக அதிக அளவில் மதுபானம் குடிக்கும் விளையாட்டை விளையாடி மாண்டார்.
பிரதர் ஹூவாங் என்றழைக்கப்படும் அந்த ஆடவர் அளவுக்கு மிஞ்சிய மதுபானம் குடித்ததால் மாண்டதாக அவரது மனைவி ஜூன் இரண்டாம் தேதி தகவல் வெளியிட்டார்.
தமது கணவர் திருமணத்திற்காக அதிகமாகக் கடன் வாங்கியதாகவும் அதனைத் திருப்பியடைக்க வித்தியாசமான காணொளிகளை உருவாக்கி அதை அதிகம் பேர் பார்த்தால் வருமானம் பெருகும் என்ற எண்ணத்தில் இந்த விளையாட்டு காணொளியை எடுத்ததாகக் கூறினார்.
பிரதர் ஹூவாங்கின் சமூக ஊடகக் கணக்கில் 176,000 ரசிகர்கள் உள்ளனர். அவர் மதுபானம் குடிக்கும் காணொளிகள், டுரியான் பழத்தை கையால் உடைப்பது, வால்நட் பருப்பை தலையால் உடைப்பது போன்ற ஆபத்தான செயல்களை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
சீனாவில் கடந்த 30 நாள்களில் மட்டும் இதுபோன்ற விளையாட்டை விளையாடி இருவர் மாண்டனர்.
இதற்கு முன்னர் மே 16ஆம் தேதி வோங் என்ற ஆடவர் அதிக அளவு போதை தரும் நான்கு போத்தல் மதுபானம் குடிப்பதை நேரலையாக சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அவரும் அளவுக்கு மிஞ்சிய மதுபானம் குடித்ததால் மாண்டார்.
2012ஆம் ஆண்டு சீன சமூக ஊடகத்தில் பிரபலமான ஒருவர் தமது ரசிகர்கள் பூச்சிக்கொல்லி மருந்தை நேரலையில் குடிக்கச் சொன்னதை ஏற்றுக்கொண்டு குடித்து மாண்டார்.