பெய்ஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியில் பள்ளி பேருந்து ஒன்று மக்கள் கூட்டத்தின் மேல் மோதியது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வெளியே நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் பெற்றோர், மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக சீன ஊடகமான ‘சிசிடிவி’ தகவல் வெளியிட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் ஷன்டாங் மாநிலத்தில் உள்ள தாயன் நகரத்தில் காலை 7.27 மணிவாக்கில் நடந்ததாக ‘சிசிடிவி’ தெரிவித்தது.
மாண்டவர்களில் 5 பேர் மாணவர்கள் என்றும் மற்ற 6 பேர் பெற்றோர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
மேலும் 12 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல்நிலை சீராக உள்ளது.
சம்பவம் குறித்த காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் சாம்பல் நிறத்தில் உள்ள பள்ளி வாகனம் மீது ரத்தக்கறை படிந்திருந்தது.
மாண்ட மாணவர்களின் சடலங்களை சிலர் கட்டியணைத்து கதறும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தது.
பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
சீனாவில் உள்ள பெரும்பாலான பொது பள்ளிகளின் கல்வியாண்டு இவ்வாரம் முதல் தொடங்கியது. கல்வியாண்டு தொடங்கிய இரு நாள்களிலேயே இச்சம்பவம் நடந்தது அவ்வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.