பெய்ஜிங்: அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வேலைவாய்ப்பைச் சீராக வைத்திருக்க முடியும் என சீனா தெரிவித்துள்ளது.
ஊழியர் சந்தையில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வந்தாலும், புதிய வேலைகளை உருவாக்கவும் பாரம்பரியப் பணிகளை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி அந்நாடு ஆய்வு நடத்தி வருகிறது.
பெய்ஜிங்கில் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்ற சீன நாடாளுமன்ற வருடாந்தர கூட்டத்தின் ஒரு பகுதியாகச் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அச்சந்திப்பில் பேசிய அந்நாட்டுச் சமூகப் பாதுகாப்பு, மனிதவள அமைச்சர் வாங் சியாபிங் மேற்குறிப்பிட்ட தகவல்களைத் தெரிவித்தார்.
மேலும், ‘ஏஐ’யின் விரைவான வளர்ச்சி வேலைவாய்ப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் அனைத்துலக கவனத்தைப் பெற்றுள்ளதையும் ஒப்புக்கொண்ட அவர், மக்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.
நீண்ட காலமாகச் சீனப் பொருளியலுக்கு அடிப்படையாக இருக்கும் துறைகளின் வளர்ச்சி வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்ட திருவாட்டி வாங்,“ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் நிலைமையைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் எங்களிடம் நம்பிக்கையும் திறனும் உள்ளது,” என்றார்.

