பெய்ஜிங்: ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்த சீன எண்ணெய் சுத்திகரிப்புக் கப்பல் கடந்த வாரம் தாக்கப்பட்டதாகச் சீன வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (மே 8) உறுதிப்படுத்தியது.
மத்திய கிழக்குப் போரால் அவ்வட்டாரக் கடற்பகுதியில் சிக்கியுள்ள கப்பல்கள் குறித்து சீனா ஆழ்ந்த கவலைத் தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பலில் சீனர்கள் உள்ளனர், இருந்தாலும் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதைப் பற்றிய தகவல் இல்லை என்பதையும் அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே சீன ஊடகமான ‘கைசின்’, சிப்பந்திகளுடன் சென்ற சீன எண்ணெய்க் கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையில் திங்கட்கிழமை (மே 4) தாக்கப்பட்டதாக வியாழக்கிழமை (மே 7) செய்தி வெளியிட்டது.
சீனா, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள்
புதன்கிழமை (மே 6) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி இருவரின் சந்திப்பு பெய்ஜிங்கில் நடப்பதற்கு முன்னதாக அந்தத் தாக்குதல் நடந்துள்ளது. நீரிணையை வர்த்தகத்துக்கு மீண்டும் திறப்பது குறித்து அவர்கள் அப்போது பேச்சுவார்த்தை நடத்தினர்.
போர் தொடங்கியதிலிருந்து சீனா ஈரானிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்கி வருகிறது. மேலும் ஈரானின் இறக்குமதிகள் சீனாவில் மார்ச் மாதம் தடைகள் இன்றி நடைபெற்றன.
தாக்கப்பட்டக் கப்பல் அதிகாரபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை.

