பெய்ஜிங்: சீனாவில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 15) வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே சரிந்தது.
இதனால் அப்பகுதிகளில் இருக்கும் சாலைகள் பனிப்போர்வை போர்த்தியதுபோல் காணப்பட்டன.
வாகனங்கள் பனிக்கட்டிகளின்மீது மோதி விபத்துகள் ஏற்படுவதால் சீன அதிகாரிகள் விரைவுச்சாலைகளில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர்.
சீனாவின் வடகிழக்கு மாநிலமான ஹெய்லோங்ஜியாங்கின் சில பகுதிகளிலும் சின்ஜியாங்கின் மேற்குப் பகுதியிலும் உள் மங்கோலியா, கன்சு, சிங்காய் ஆகிய மாநிலங்களிலும் வெப்பநிலை உறைநிலைக்குக்கீழ் 40 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என அந்நாட்டு தேசிய வானிலை நிலையம் முன்னுரைத்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் வீசத் தொடங்கிய குளிர் காற்று அலை, சீனாவின் வடக்குத் திசையிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது.
இதனால் மழையும் பனிப்பொழிவும் குறையும் என வானிலை நிலையம் தெரிவித்தாலும், வாரயிறுதி நாள்களில் வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் அது கூறியது.