பொகாட்டா: கொலம்பிய நாடாளுமன்றத்தில் சுகாதாரப் பராமரிப்பைச் சீரமைப்பது குறித்து நடந்த விவாதத்தின்போது பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மின்சிகரெட் புகைத்தது காணொளியில் பதிவானதை அடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வலம்வரும் அந்தக் காணொளியில், தமது சகாக்களிடம் பேசுவதற்கு முன்னதாக பொகாட்டா நகரைப் பிரதிநிதிக்கும் ‘கிரீன் அலாயன்ஸ்’ கட்சி உறுப்பினர் கேத்தி ஜுவினோ, பளிச் மஞ்சளில் இருந்த மின்சிகரெட்டை வேகமாக ஓர் இழு இழுத்ததைக் காண முடிகிறது.
கொலம்பிய அரசாங்கக் கட்டடங்களில் மின்சிகரெட்டுகளையும் சிகரெட்டுகளையும் புகைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேமரா தம்மைத் திடீரெனக் காட்டியபோது ஜுவினோ அந்தக் கருவியைச் சட்டென மறைப்பதைக் காண முடிந்தது.
இதையடுத்து அவரது செயல் வெகுவாக விமர்சிக்கப்பட்டு வந்ததை அடுத்து, ‘எக்ஸ்’ தளத்தில் மன்னிப்பு கோரி பதிவிட்டார் ஜுவினோ.
பொதுமக்களைப் போதையில் தள்ளும் தவறான கூட்டத்தில் தாம் சேரப் போவதில்லை என்றும் இனி இவ்வாறு தாம் செய்யப் போவதில்லை என்றும் பதிவிட்டார் அவர்.
இந்நிலையில், உடனே மன்னிப்பு கோரிய அவரது செயலைச் சிலர் பாராட்டி வருகின்றனர்.

