சோல்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அடுத்த வாரம் கொரிய தீபகற்பத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அப்போது அவர் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க அதிக வாய்ப்பிருப்பதாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
திரு டிரம்ப், ஏபெக் மாநாட்டில் பங்கேற்க வரும் புதன்கிழமை (அக்டோபர் 29) தென்கொரியா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்வது குறித்து ரகசியமாகக் கலந்துபேசியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பு கடைசியாக 2019ஆம் ஆண்டில் திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சந்திப்பு நடத்தினர்.
“அமெரிக்கா மீதும் இதர பல அறிகுறிகள் மீதும் வடகொரியா கவனம் செலுத்தி வருவதுபோல் தெரிகிறது; அவற்றை வைத்துப் பார்க்கும்போது டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்க அதிக வாய்ப்பிருப்பதுபோல் தென்படுகிறது,” என தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சுங் டோங் யங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திரு கிம்மை மீண்டும் சந்திக்க எண்ணம் கொண்டுள்ளதாக திரு டிரம்ப் கூறியிருக்கிறார். அச்சந்திப்பு இவ்வாண்டு நடைபெறக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

