பெஷாவர்: பாகிஸ்தானில் கனமழையாலும் மின்னலாலும் மேலும் 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கடந்த நான்கு நாள்களில் மோசமான வானிலை காரணமாக, மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது 63க்கு அதிகரித்துள்ளது.
பெரும்பாலான மரணங்கள், பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்குவா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன.
கட்டடங்கள் இடிந்ததில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 15 குழந்தைகளும் ஐந்து பெண்களும் அடங்குவர் என்றும் பேரிடர் நிர்வாக ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
1,370 வீடுகள் சேதமுற்ற வடமேற்குப் பகுதியில், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அவர் சொன்னார்.
கிழக்கில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் மின்னல் காரணமாக 21 பேர் மாண்டனர்.
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் அங்கு அவசர நிலையை அறிவித்துள்ளது. அங்குப் பத்துப் பேர் உயிர் இழந்தனர்.
பருவநிலை மாற்றத்தால் ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் மேலும் கடுமையான மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.