மணிலா: பிலிப்பீன்சில் தீப்பிடித்த படகில் மாண்டோர் எண்ணிக்கை 76க்குக் கூடியுள்ளது. படகின் இடிபாடுகளிலிருந்து 41 சடலங்களை மீட்டதாக அந்நாட்டின் கடலோரக் காவற்படை கூறியது.
மணிலாவில் இருந்து புறப்பட்டு, சுற்றுலாத்தலமான கோரோன் தீவை அணுகியபோது, புதன்கிழமை (செப்டம்பர் 9) ‘எம்.வி ஜூன் ஆஸ்டர்’ என்ற அந்தப் படகில் தீப்பற்றியது. அப்போது அதில் 130க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உள்ளதாகவும் அவர்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டது.
இன்னும் 13 பேரைக் காணவில்லை என்றும் கடலோரக் காவற்படை தெரிவித்தது.
நச்சுப் புகையாலும் தணியாத வெப்பத்தாலும் வெள்ளிக்கிழமை வரை அதிகாரிகளால் படகிற்குள் செல்லமுடியவில்லை. அதனால் சடலங்களை மீட்கும் பணி தடைபட்டது.
பலியானவர்களை அடையாளம் காண்பதும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதுமே தற்போதைய முக்கிய நோக்கம் என்று பிலிப்பீன்ஸ் கடலோரக் காவற்படை அதிகாரி ஜெரோனிமோ டுவில்லா தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட படகில் 117 பயணிகளும் 17 சிப்பந்திகளும் இருந்தனர்.
படகை இயக்கிவந்த ‘அட்டியென்ஸா இன்டர்ஐலண்ட் ஃபெரீஸ்’ நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துவருவதை உறுதிசெய்தது.

