மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அமுர் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை வேதியியல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது ஏழாக உயர்ந்ததோடு ஒன்பது பேரை இதுவரைக் காணவில்லை.
அதோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 36 நபர்கள் உட்பட மொத்தம் 152 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அந்த வேதியியல் ஆலை புதன்கிழமை (ஆகஸ்ட் 26) டெலிகிராம் செயலியில் உறுதிசெய்தது.
ஆலையில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் அதன் நிர்வாகம் தெரிவித்தது.
ரஷ்யாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு காயமடைந்தோரை அழைத்துச்செல்ல அவசரச்சேவை விமானம் ஒன்று அங்கு தரையிறக்கப்பட்டுள்ளது.
மரணம் அடைந்த எழுவரில் அறுவர் சீனர்கள்.
உலகிலேயே ஆகப் பெரிய நெகிழி (பிளாஸ்டிக்) உற்பத்தி வளாகம் என்று கூறப்படும் அந்த ஆலையானது, ரஷ்ய நிறுவனமான சிபுர், சீன எண்ணெய், எரிவாயு நிறுவனமான சைனோபேக் ஆகிய இரு அமைப்புகளின் கூட்டு ஏற்பாடாகும்.
இதுவரை உற்பத்தியைத் தொடங்காத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பு பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்திவருகிறது.
ஓரே ஆண்டில் அமுர் எரிவாயு வேதியியல் வளாகம் 2.3 மில்லியன் டன் அளவு பாலியிதைலீன், 400,000 டன் அளவு பால்புரோபைலின் ஆகிய இரு வகை நெகிழிகளை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


