வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் துணையதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.
இவ்விருவரும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். அதில், திருவாட்டி கமலா ஹாரிஸ் தன் கருத்துகளைச் சிறப்பாக எடுத்துரைத்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கு முன்னர் மற்றொரு நேரடி விவாதத்திற்கான சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் அழைப்பை அமெரிக்கத் துணை அதிபர் ஹாரிஸ் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், அந்த அழைப்பை திரு டிரம்ப் நிராகரித்துள்ளார்.
நார்த் கரோலைனாவின் வில்மிங்டன் பகுதியில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப், “வாக்குப்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. மற்றொரு விவாதத்துக்கான காலம் கடந்துவிட்டது,” என்றார்.
தேர்தலுக்குமுன் மற்றொரு நேரடி விவாதம் இல்லை எனத் திரு டிரம்ப் தனது முந்தைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கத் துணை அதிபருக்கும் குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டோனால்ட் டிரம்ப்புக்கும் இடையே அக்டோபர் 23ஆம் தேதி 2வது நேரடி விவாதத்தைத் நடத்த சிஎன்என் தொலைக்காட்சி திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.