தோக்கியோ: ஜப்பானின் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. அதை அதிகரிக்க அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், கருத்தடை உரிமை கேட்டு ஐந்து ஜப்பானியப் பெண்கள் சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஜப்பானின் ஆணாதிக்க சமூகம் நீண்டகாலமாக தன்னைத் தாய்மையை நோக்கித் தள்ளியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தனது சுய விருப்பத்தின் பேரில் அமெரிக்காவில் கருத்தடை செய்துகொண்டதாக 29 வயது கசானே காஜியா கூறினார்.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது அவரின் வயது 27.
காஜியாவுடன் இணைந்து அந்நாட்டுப் பெண்கள் நால்வர் தாய்மைப் பாதுகாப்பு சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கருத்தடை செய்வதற்கு உலகின் மிகவும் கடுமையான தடைகளில் ஒன்றாக அச்சட்டம் கருதப்படுகிறது.
அச்சட்டத்தின்படி, ஒரு பெண் கருத்தடை செய்ய தகுதியடைய வேண்டுமானால், அவர் ஏற்கெனவே பல பிள்ளைகளை ஈன்றிருக்க வேண்டும்; அவரது உடல்நலத்தில் ஏதேனும் பாதிப்பு இருக்க வேண்டும் அல்லது கர்ப்பத்தினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, கருத்தடை செய்ய கணவரின் சம்மதமும் கட்டாயமாகும்.
காஜியா போன்ற ஆரோக்கியமான, குழந்தை இல்லாத பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய அச்சட்டம் மருத்துவர்களுக்குத் தடை விதிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அதன் காரணமாகவே அமெரிக்காவிற்குச் சென்று தனது கருக்குழாய்களை அகற்றியதாக அவர் தெரிவித்தார்.
காஜியா தொடுத்த வழக்கிற்கானத் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

