அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கியவ்மீது நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதல் அதிருபதியளித்திருப்பதாகவும் அதை நிறுத்திம்படியும் அதிபர் விளாடிமிர் புட்டினிடம் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 24) உக்ரேனியத் தலைநகர் கியவ்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் மாண்டனர். பலருக்குக் காயம் ஏற்பட்டது.
ஜூலை மாதத்துக்குப் பின் கியவ்மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலை அடுத்து ரஷ்ய- உக்ரேன் போரை நிறுத்தும்படி இருதரப்பின் மேல் அழுத்தம் கொடுத்து வருவதாக அதிபர் டிரம்ப் சொன்னார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை வழக்கத்துக்கு மாறாக குறைகூறிய திரு டிரம்ப், தமது ட்ருத் சமூக (Truth Social) தளத்தில் ‘தேவையற்றது, சரியான நேரமும் இல்லை. விளாடிமிர் நிறுத்து!’ என்று பதிவிட்டுள்ளார்.
அமைதிக்கான உடன்பாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளும்படி உக்ரேனுக்கும் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் அழுத்தம் அதிகரித்து வரும் வேளையில் கியவ்மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
யார்மீதும் தமக்குப் பற்று இல்லை, உயிர்களைக் காப்பாற்றுவதில்தான் உறுதியுடன் இருப்பதாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
திரு புட்டின்மீது எரிச்சல் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப், உடன்பாடு எட்டப்படுகிறதா என்று இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்க்கவிருப்பதாகச் சொன்னார். தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் அந்த உடன்பாடும் எட்டப்படாது என்றார் அவர்.
உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி சண்டை நிறுத்த உடன்பாட்டை எட்ட ரஷ்யாமீது அமெரிக்கா இன்னும் கூடுதல் அழுத்தம் கொடுக்கலாம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவுடன் சமரசம் பேச உக்ரேன் தயாராக இருக்கிறது என்றும் சண்டைநிறுத்தம்தான் முதல் படியாக இருக்க வேண்டும் என்று திரு ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
“ரஷ்யாவும் சண்டைநிறுத்தத்துக்குத் தயார் என்று சொன்னால் உக்ரேன் மீதான் பயங்கரத் தாக்குத்லகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள்தான் தாக்கப்படுகிறோம் என்பதால் பொறுமை இழந்துவருகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.