பெய்ஜிங்: வடமேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 18) 6.2 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இன்னும் 12 பேரைக் காணவில்லை.
ஆனால், மீட்பு நடவடிக்கை இவ்வளவு விரைவில் முடிந்திருப்பது குறித்து இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கான்சு-கிங்ஹாய் மாநில எல்லை அருகே உள்ள மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 15 மணி நேரத்தில், அதாவது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தேடுதல், மீட்புப் பணி நிறைவு பெற்றுவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால், கிங்ஹாயில் தேடுதல் பணி தொடர்ந்ததா என்பது குறித்து தெரியவில்லை.
புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, கான்சுவில் 115 பேர் உயிரிழந்ததாகவும் 784 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு 8.56 மணி நிலவரப்படி, கிங்ஹாயில் மரண எண்ணிக்கை 22ஆக உயர்ந்தது; 198 பேர் காயமுற்றனர்; 12 பேரைக் காணவில்லை.
நிலநடுக்கத்தால் 207,000க்கும் அதிகமான வீடுகள் சேதமுற்றன. கான்சுவில் மட்டும் கிட்டத்தட்ட 15,000 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் 145,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.