ஜோகூர் பாரு: போதைப்பொருள்களை பொட்டலமிட்டு விநியோகம் செய்யும் கும்பலுக்கு வேலை செய்ததாக ஏழு பேரை ஜோகூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் மலேசிய ஆடவர்கள், ஒரு மலேசியப் பெண், ஒரு சிங்கப்பூர் ஆடவர், ஒரு வியட்னாமியப் பெண் ஆவர். அவர்களின் வயது 31க்கும் 60க்கும் இடைப்பட்டது.
மார்ச் 30, 31 ஆம் தேதிகளில் தாமான் மெகா ரியாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பிலும், தாமான் ஸ்ரீ தெப்ராவில் உள்ள ஒரு கடையிலும் நடத்தப்பட்ட சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கைத் தொடர்பான விவரங்களை ஜோகூர் காவல்துறையின் தலைவர் ரஹ்மான் அர்சத் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
“கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபராக 38 வயது மலேசிய ஆடவர் உள்ளார். அவர் போதைப்பொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்பவர் என்று சந்தேகிக்கப்படுகிறது,” என்று திரு ரஹ்மான் கூறினார்.
“மற்ற ஆறு பேரும் போதைப்பொருள்களை நகரத்தில் உள்ள பொழுதுபோக்கு நிலையங்களில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சிறுநீர் பரிசோதனையில் ஆறு பேரும் போதைப்பொருள் உட்கொண்டது நிரூபணமானது.
கைது நடவடிக்கையின்போது கிட்டத்தட்ட S$395,000 மதிப்புள்ள போதைப்பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

