பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கே உள்ள குவாங்ஸி வட்டாரத்தைத் திங்கட்கிழமை (மே 18) காலை நிலநடுக்கம் உலுக்கியதில் இருவர் மாண்டனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, லியுசாவ் நகரிலிருந்து 7,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். தேடுதல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிலநடுக்கத்தில் இருவர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒருவரைக் காணவில்லை. காயமடைந்த நால்வர், மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கச் செய்தி ஊடகமான ஸின்ஹுவா அதனைத் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின்போது 13 கட்டடங்கள் சேதமடைந்ததாகச் சீனாவின் அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான ‘சிசிடிவி’ தெரிவித்தது.
போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று ரயில்வே துறையினரும் எச்சரித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொடர்பு, மின்சாரச் சேவைகளும் தண்ணீர், எரிவாயு விநியோகமும் வழக்கம்போல் இயங்குவதாக அரசாங்க ஊடகம் கூறியது.

