பெய்ஜிங்: சீனா புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கும் முயற்சிகளை விரைவுபடுத்தும் என்று அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் கூறியிருக்கிறார்.
உயர்தர வளர்ச்சியில் நாடு கவனம் செலுத்தும் என்றார் அவர். சீனப் புத்தாண்டுச் செய்தியில் திரு ஸி அவ்வாறு தெரிவித்தார்.
நிலைத்தன்மையையும் சமுதாய நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்க நாடு முனையும் என்று அவர் சொன்னார். தலைநகர் பெய்ஜிங்கில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) ஸி அந்தக் கருத்துகளை முன்வைத்ததாக அரசாங்க ஊடகமான சைனா சென்ட்ரல் தொலைக்காட்சி தெரிவித்தது.
கம்யூனிசக் கட்சியின் தன்னாட்சி முறையைச் சீனா தொடர்ந்து முழுமையாகவும் வலிமையாகவும் முன்னெடுக்கும் என்று திரு ஸி கூறினார். 15ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தை வலுவாகத் தொடங்கவும் சீனா முயற்சி மேற்கொள்ளும் என்றார் அவர்.
சீனாவில் சீனப் புத்தாண்டுக்கு முன்னர் நாட்டின் தலைவர் உரையாற்றுவது வழக்கம். இம்முறை சீனப் புத்தாண்டு, பிப்ரவரி 17ஆம் தேதி வருகிறது. குதிரை ஆண்டின் தொடக்கத்தை அது குறிக்கிறது.


