லங்காவி: இவ்வாண்டு தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக உள்நாட்டுப் பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆசியான் கூட்டமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கும் மலேசியா, அத்தகவலை வெளியிட்டது.
“பதற்றநிலையைப் போக்குவதற்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டுமே தவிர தேர்தல் நடத்துவதற்கு அல்ல என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்,” என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முன்னணி அரசதந்திரிகள் மலேசியாவின் லங்காவி தீவில் சந்திப்பு நடத்திய பிறகு அந்த செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.
ராணுவ ஆட்சியில் இயங்கும் மியன்மாரில் நிலவிவரும் நெருக்கடி தொடர்பில் ஆசியான் சிறப்புத் தூதராக மலேசியா, அரசதந்திரி ஒத்மான ஹஷிமை நியமித்துள்ளது என்றும் திரு ஹசான் சொன்னார்.
திரு ஒத்மான், மலேசிய வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆவார். ஆசியானின் அமைதித் திட்டத்தை மியன்மாரில் அமல்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள மலேசியா, அவரை நியமித்துள்ளது.
மியன்மாரில் தொடரும் உள்நாட்டுப் போர் மோசமடைந்து வருகிறது.