வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் சனிக்கிழமை (மார்ச் 1ஆம் தேதி) நாட்டின் அதிகாரத்துவ மொழியாக ஆங்கிலம் விளங்கும் என அறிவித்துள்ளார்.
இது பல நாடுகளிலிருந்து வந்தவர்களைப் பிரதிபலிக்கும் நாடாக விளங்கும் அமெரிக்காவிற்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.
“தேசிய அளவில் அதிகாரத்துவ மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி ஒன்றுபட்ட, பிணைப்புடன் விளங்கும் ஒரு நாட்டின் அடித்தளம். அத்துடன், ஒரே மொழியில் பேசி தங்கள் கருத்துகளை மற்றவருடன் சுதந்திரமாக பகிர்ந்துகொள்ளும் ஒரு சமுதாயம் நாட்டிற்கு வலுச்சேர்க்கிறது,” என்று டிரம்ப் பிறப்பித்த ஆணை கூறியது.
ஆங்கிலம் அதிகாரத்துவ மொழியாக காலம்கடந்து அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிபரின் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்தது.
அதிபர் டிரம்ப்பின் இந்த ஆணை இதற்கு முன்னர் 1990களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளது. அந்த உத்தரவில் ஆங்கிலம் பேசாத மக்களுக்கு அமெரிக்க கூட்டரசு அமைப்புகள் நிதி தருவதன் மூலம் உதவ வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
எனினும், டிரம்ப்பின் தற்போதைய உத்தரவுப்படி, மத்திய அரசு அமைப்புகள் மற்ற மொழிகளுக்கு எந்த அளவு உதவி வழங்க வேண்டும் என்பதில் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் வெள்ளை மாளிகை அறிக்கை, நாட்டில் 350 மொழிகள் பேசப்படுவதை ஒப்புக்கொள்கிறது. ஆனால், அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து ஆங்கிலமே நாட்டின் முக்கிய மொழியாக இருந்து வந்துள்ளது என்றும் சுதந்திரப் பிரகடனம், அரசியல் நிர்ணயச் சட்டம் போன்ற அனைத்து நாட்டு ஆவணங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளதைச் சுட்டியது.

