குவெட்டா: தெற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை (ஜூலை 30) நடந்த வெடி விபத்தில் 34 ஊழியர்கள் மரணமடைந்தனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மீட்புக் குழுவினர் காணாமல்போன ஊழிர்களைத் தேடும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளதாகவும் அது கூறியது.
பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சௌரஞ் எனப்படும் இடத்தில் சுரங்கம் இயங்கிவருகிறது. அச்சுரங்கத்தில் மீத்தேன் வாயுக் கசிவினால் அந்தப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மீட்புக் குழுவினர் 34 உடல்களைக் கண்டெடுத்துள்ளனர்.
வெடிப்பு நிகழ்ந்தபோது சுரங்கத்தில் மொத்தம் எத்தனை ஊழியர்கள் சிக்கியிருந்தனர் என்பதை அமைப்பு வெளியிடவில்லை.
விபத்து நடந்ததும் உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்றும் எண்ணத்துடன் சுரங்கத்திற்கு வெளியில் இருந்த பல ஊழியர்களும் உள்ளே நுழைய முயன்றதாக நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர். ஆயினும் அவர்களும் மரணமடைந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
இயற்கை வளம்
பெரிய நிலப்பரப்பாக இருந்தாலும் பாகிஸ்தானின் ஆக ஏழ்மையான மாநிலமாகப் பலுசிஸ்தான் கருதப்படுகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, பொருளியல் மேம்பாடு என அனைத்து நிலைகளிலும் அம்மாநிலம் பின்தங்கியுள்ளது. இருப்பினும் நிலக்கரி, செம்பு, தங்கம் போன்ற விலைமதிப்புள்ள இயற்கை வளங்கள் அங்கு நிறைந்துள்ளன.

