சோல்: தென்கொரியாவில் உள்ள விண்வெளித்துறை ஆலை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர், இருவர் காயமுற்றனர்.
டேஷோன் நகரில் ஹான்வா ஏரோஸ்பேஸ் நிறுவனம் நடத்தும் ஆலையில் திங்கட்கிழமை (ஜூன் 1) இச்சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரில் ஒருவர் மோசமான தீக்காயங்களுக்கு உள்ளானார். இருவரும் ஆலையிலிருந்து தப்பியோடியவர்கள் என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“மாண்டோரின் உடல்கள் பெருஞ்சேதத்துக்கு உள்ளானதால் அவர்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை,” என்று சுகாதார அதிகாரி ஒருவர் அதே கூட்டத்தில் தெரிவித்தார்.
வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீ முண்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் சொன்னார். வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எறிபடைகளைப் பாய்ச்சுவதற்கான பொருள்களைச் (rocket propellant) செய்யும் கருவிகளில் உள்ள வெடிபொருள்களை நீரினால் சுத்தம் செய்யும்போது வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது என்று ஹான்வா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாண்டோரிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் தலைகுனிந்து தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஹான்வாவின் தலைமை நிர்வாக அதிகாரி சோன் ஜே இல் கூறினார். விபத்துக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அவர் உறுதியளித்தார்.

