வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மிதமிஞ்சிய குளிர் பருவநிலை நிலவுவதால், மீண்டும் அதிபராக தேர்வு பெற்றுள்ள டோனல்ட் டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (ஜனவரி 20ஆம் தேதி) உள்ளரங்குக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் அதிபர் பதவியேற்பு நிகழ்வு உள்ளரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
“ஆர்டிக் பகுதியிலிருந்து காற்று முழுவீச்சாக வீசுகிறது. மக்களில் எவரும் காயமுறுவதைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை,” என்று டுருத் சோஷியல் (Truth Social) சமூக ஊடகத் தளத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17ஆம் தேதி) திரு டிரம்ப் தகவல் பதிவேற்றினார்.
“ஆதலால், பதவியேற்பு உரை, பிரார்த்தனைகள், மற்ற உரை அனைத்தையும் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடமான கேப்பிட்டல் ரொட்டாண்டாவில் நடைபெற உத்தரவிட்டுள்ளேன்,” என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு முன் 1985ஆம் ஆண்டு முந்தைய அமெரிக்க அதிபர் ரோனல்ட் ரீகன் பதவியேற்பு நிகழ்ச்சி உள்ளரங்கில் இடம்பெற்றது. அப்பொழுது குளிர்நிலை உறைபனிக்குகீழ் 23லிருந்து 29 டிகிரி செல்சியஸ் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை திரு டிரம்ப் பதவியேற்கும் நாள் பருவநிலை உறைபனிக்குகீழ் 7 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் குளிர் காற்றும் வீசுவது குளிர்நிலையை மேலும் மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.