சோல்: தென்கொரிய ராணுவம் இந்த ஆண்டு (2025) முற்பாதியில் 9,200க்கும் மேற்பட்ட இணையத் தாக்குதல் முயற்சிகளை முறியடித்ததாகக் கூறியுள்ளது.
சென்ற ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க இது கிட்டத்தட்ட 45 விழுக்காடு அதிகம்.
பெரும்பாலான இணையத் தாக்குதல் முயற்சிகள் வடகொரியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தென்கொரிய ராணுவத்தைக் குறிவைத்து மொத்தம் 9,262 இணையத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தென்கொரிய ராணுவம் கூறியது.
இருப்பினும் ராணுவத்தின் இணையக் கட்டமைப்பு மீதான இணையத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கடுமையான எச்சரிக்கை என்றும் பாதுகாப்பு, கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை முழுமையாகக் கட்டிக்காப்பது தொடர்பான விழிப்புணர்வை ராணுவ அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும் என்றும் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் சக்திக் கட்சி கூறியுள்ளது.