தன்னெதிர்ப்பு நோயால் (ஆட்டோ இம்யூன் பிரச்சினை) நிமிர முடியாமல் உடல் வளைந்துபோய் அவதியுறும் 19 வயது இளையருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பல்கலைக்கழக மாணவரான ஜியாங் யான்சென், கடைசியாக நிமிர்ந்து நின்றது 10 ஆண்டுகளுக்கு முன்பு. காலப்போக்கில் அந்நோய் மோசமடைந்ததால் இவரது கழுத்து முதுகைத் தொடும் அளவுக்குப் பின்னோக்கி வளைந்தது.
ஒரு மீட்டர் உயரமுள்ள ஜியாங், சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
தொடக்கப்பள்ளியில் இருந்து, நாற்காலியில் இவர் மண்டியிட்ட நிலையில் வகுப்பறையில் பாடங்களைக் கவனிக்க வேண்டி உள்ளது. வாசிப்பதோ எழுதுவதோ இவருக்கு எளிதான காரியமல்ல.
எனினும், வாழ்வை அர்த்தமுள்ள வகையில் வாழ ஜியாங் உறுதியுடன் இருக்கிறார்.
“இப்பொழுதே என்னால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடிகிறதோ அத்தனையையும் கற்க நான் முயற்சி செய்கிறேன். அப்போதுதான், எனக்கு இருக்கும் நோய் ஒருநாள் குணப்படுத்தப்பட்டவுடன், நான் ஓர் ஆற்றலுடைய மனிதனாக முடியும்,” என்றார் ஜியாங்.
இந்நிலையில், சிக்கலான சில அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்ள, ஷான்டோங் மாநிலத்தில் இருக்கும் தமது சொந்த ஊரிலிருந்து கடந்த மாதம் பெய்ஜிங்கிற்கு இவர் புறப்பட்டார். அந்த அறுவை சிகிச்சைகள் முடிவடைய ஏறக்குறைய மூன்று மாதங்களாகும்.
ஜியாங் புறப்படுவதற்கு முன்பு, “நீ திரும்பும்போது, உனக்கு இனி சக்கர நாற்காலி தேவைப்படாது. நீ நடந்து வரலாம்,” என்று தாயார் இவரிடம் கூறினார்.
முதலாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஜியாங்கின் கழுத்து வழக்கநிலைக்குத் திரும்பியது.
முதுகை நிமிர்த்த இன்னும் குறைந்தது நான்கு அறுவை சிகிச்சைகளையாவது இவர் செய்துகொள்ள வேண்டும்.