கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் தாமான் லெம்பா கெரமாட் பகுதியில் அமைந்துள்ள உணவங்காடி நிலையம் ஒன்று, சனிக்கிழமை அதிகாலையில் தீப்பற்றி எரிந்தது.
இதன் விளைவாக அவ்வுணவு வளாகத்தின் 80 விழுக்காடு நாசமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தீச்சம்பவத்தில் உயிருடற்சேதம் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டது.
உதவி கோரி விடிகாலை 5.49 மணிக்கு அழைப்பு வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அம்பாங், பாண்டான், வங்சா மாஜு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 18 தீயணைப்பாளர்கள் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் கூறினார்.
“அவ்வுணவங்காடி நிலையத்தில் இருந்த எட்டுக் கடைகள் பாதிக்கப்பட்டன. அவ்விடத்தில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு சேதமடைந்தது,” என்று அப்பேச்சாளர் தெரிவித்தார்.