தைவான்: தைவானின் தற்போதைய நிலைமையை வலுக்கட்டாயமாகவோ வற்புறுத்தியோ மாற்ற முயலும் எந்தவொரு செயலாலும் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது என்று கூறியுள்ளார் தைவான் அதிபர் லாய் சிங் டே.
இதனை அவர் கடிதமாக எழுதி திருத் தந்தை பதினான்காம் (XIV) லியோவுக்கு அனுப்பியுள்ளதாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
சீனாவால் உரிமை கோரப்படும் தைவானுடன் முறையான அரசதந்திர உறவுகளைப் பேணுகின்ற 12 நாடுகளில் வத்திக்கனும் ஒன்று. மேலும் ஐரோப்பாவில் உள்ள ஒரே நாடும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உலக அமைதி தொடர்பிலான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக போப் லியோவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ஜனநாயகம், அமைதி, செழிப்பு ஆகியவை தைவானின் தேசிய பாதை; உலகத்துடன் தைவான் கொண்டுள்ள நல்லுறவுக்கு அதுவே அடிப்படை,” என்று பலமுறை வலியுறுத்தியதாக அதிபர் லாய் கூறினார்.
மேலும், சீனாவை நேரடியாக சாடாமல், “வட்டாரத்தில் உள்ள சர்வாதிகார நாடுகள் நீண்டகாலமாக விடுத்து வரும் அரசியல் மிரட்டல்கள், ராணுவ வற்புறுத்தல் ஆகியவற்றை எதிர்கொண்டாலும், எப்போதும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் தைவான் நீர்ப்பகுதியில் அமைதியைப் பாதுகாக்க முடிவு எட்டப்பட்டுள்ளது,’’ என்று அதிபர் லாய் மேலும் கூறினார்.
அதுகுறித்து மேலும் விளக்கமளித்த அவர், “தைவானின் தற்போதைய நிலையை அச்சுறுத்தல் உள்ளிட்ட பிற செயல்கள் மூலம் மாற்ற எண்ணம்கொள்ளும் எந்தவொரு முயற்சியாலும் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
தைவான் அருகே சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்வது குறித்து அக்கறை எழுப்பிய தைவான், துன்புறுத்தல்மிக்க பிரசாரம் போன்ற இச்செயல், தொடர்ச்சியான அழுத்தம் விளைவிக்கிறது என்றும் கூறிவருகிறது.
இதனிடையே, இதற்கு செவிமடுக்காத சீனா தனது போர் பயிற்சிகளை கடந்த ஆண்டு டிசம்பர் பிற்பகுதியில் தீவைச் சுற்றி நடத்தியதுடன், திரு லாய் ஆபத்தான பிரிவினைவாதி என்று குறிப்பிட்டு அவருடன் பேசவும் மறுக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

